tamilnadu

உன்னாவ் சம்பவம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

புதுதில்லி, ஜூலை 30-

உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கொல்ல முயன்றுள்ள சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உன்னாவ் சம்பவத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவரையும் மற்றும் அவருடைய குடும்பத்தாரையும் மற்றும் அவர்களுடைய வழக்குரைஞரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் சென்ற காரின்மீது தவறான பக்கமிருந்துவந்த டிரக் மோதி இருக்கிறது. அந்த டிரக்கின் நம்பர் பிளேட் எண்ணெய்ப்பசையால் பூசப்பட்டு கண்ணுக்குத்தெரியாத விதத்தில் மறைக்கப்பட்டிருந்தது. பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண், அவர் குடும்பத்தினருடன் ராபரேலியில் உள்ள சிறையில் இருக்கின்ற தங்களுடைய மாமாவைச் சந்திப்பதற்காகக் காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையம் அந்த சமயத்தில் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவருக்கு காவல் காக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், அவர் பயணத்திட்டத்தை முன்கூட்டியே சிறையிலிருக்கின்ற பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கும் தெரிவித்திருந்தனர். மேற்படி குல்தீப் செங்கார் சிறையிலிருந்துகொண்டே கை பேசி மூலமாக தனக்கு எதிராக அளித்திருக்கும் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் தொலைத்துவிடுவேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருந்தார்.  தங்களை எதிர்ப்பவர்களை தங்களுக்கு எதிராக எதுவும் கூறாது அடக்கி வைப்பதற்காக, அவர்களைக் கொலை செய்யக்கூட தங்கள் அதிகாரத்தை வெளிப்படையாகவேப் பயன்படுத்திட ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல்  தயங்காது என்பது மிகவும் சங்கடத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் அத்தைமார்கள் இருவர் இறந்துவிட்டார்கள்.

லக்னோ மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்துவரும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவர் வழக்குரைஞரையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்று பார்த்தனர்.   

உத்தரப்பிரதேசத்தில், ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் செய்திடும் தவறுகளை மூடிமறைத்திட ஆட்சியாளர்கள் தங்கள் பண பலத்தையும், புஜ பலத்தையும் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி பயன்படுத்திட தயங்க மாட்டார்கள் என்பதற்கு உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில் இப்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மிகவும் தெளிவாக உலகுக்குப் பறைசாற்றியுள்ளன.

உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கு சம்பந்தமாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ-ஆல்) சம்பவம் நடந்த ஒருசில மாதங்களில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மற்றும் அவருடைய அடியாட்களுக்கு எதிராகக் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அது இதுவரையிலும் விசாரணைக்கு வரவில்லை. அதேசமயத்தில் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தை சிறையிலிருக்கும்போதே இறந்துவிட்டார். அவர் மாமா பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் தொடர்ந்து இதுபோன்று அச்சுறுத்தல் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.

 இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையிலிருக்கும் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு எதிராகவும் அவருடைய அடியாட்களுக்கு எதிராகவும் கொலை, கொலை செய்ய முயற்சி மற்றும் குற்றமுறு (கிரிமினல்) சதி ஆகிய குற்றங்களின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த போதிலும், பாஜக மேற்படி குல்தீப் செங்காரை கட்சியிலிருந்து வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.  உத்தரப்பிரதேசத்தையும் மற்றும் நாட்டையும்  ஆளும் ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்கள் தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்திப் பணியவைத்திட ஜனநாயகத்தின் நெறிமுறைகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு,  அனைத்துவிதமான இழிமுயற்சிகளிலும் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு அச்சுறுத்தல்களையும் புறந்தள்ளிவிட்டு நெஞ்சுறுதியுடன் இவர்களை எதிர்த்து நிற்கும் வீராங்கனைக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்துவரும் அவர் வழக்குரைஞருக்கும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்களிலிருந்து நன்கு குணம் அடையும் விதத்தில் நல்ல சிகிச்சை அளித்திட வேண்டும். அதற்காகும் செலவினங்களை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் அவருடைய வழக்குரைஞருக்கும் உடனடியாக பாதுகாப்பு அளித்திட வேண்டும்.  அப்பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறையிலிருக்கும் எம்எல்ஏ-க்கு கை பேசி மூலமாகப் பேசுவதற்கு வசதி செய்து கொடுத்த சிறை அதிகாரிகளுக்கு  எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவருக்கு எதிரான வழக்கை விரைவு நீதிமன்றத்தின் மூலம் விரைந்து நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து உடனடியாக நீக்கிட வேண்டும். பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.

இந்த சம்பவங்களுக்கு எதிரான பொது மக்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் கண்டன முழக்கங்களை தங்கள் அமைப்புகளின் சார்பில் வெளிப்படுத்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர்கள்மீது அடாத செயல்களை ஏவியுள்ள கிரிமினல்களிடமிருந்தும் அவர்களுக்கு மிகவும் நாணமற்ற முறையில் ஆதரவு அளித்து வரும் ஆட்சியாளர்களிடமிருந்தும்  நீதிகிடைக்கும் வரையிலும், நாடு முழுதும் எதிர்ப்பு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் கிளைகளை அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)